MENU BAR

Monday 7 June 2021

மாண்புமிகு அமைச்சருக்கு NFPE கோட்ட சங்கத்தின் கோரிக்கை மனு

 கோரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு வீட்டுவசதி துறை அமைச்சரும்,நமது ஈரோடு மேற்கு சட்டமன்ற  தொகுதியின் உறுப்பினருமான மாண்புமிகு சு. முத்துசாமி MLA அவர்களிடம்,நமது கோட்ட சங்கத்தின் சார்பில் கோட்ட செயலர் தோழர் செல்லமுத்து அவர்கள் இன்று 07.06.2021 நேரில் சந்தித்து  அளித்துள்ள கோரிக்கை மனு கீழ்கண்டவாறு...


NFPE

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள்

ஈரோடு கோட்டக்கிளை, ஈரோடு 638001

NFPE/covid19/dlgs dated 07.06.2021


பெறுநர்:

உயர்திரு சு.முத்துசாமி அவர்கள், 

வீட்டுவசதிதுறை அமைச்சர், 

சட்டமன்ற உறுப்பினர் - ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு 638001


மதிப்பிற்குரிய ஐயா,


பொருள் : ஈரோடு கோட்ட அஞ்சல் ஊழியர்களுக்கு தகுந்த கொரொனோ தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டி

வணக்கம். 


நமது நாடு கொரோனா தோற்று பரவலால் , கடும் இன்னல்களை சந்தித்து வரும் இந்த சமயத்தில், மருத்துவம், காவல் போன்ற துறைகளோடு நமது இந்திய அஞ்சல் துறையும்  மக்கள் சேவையை தொடர்ந்து வழங்கி வருகின்றது என்பதை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறோம்.


முக்கியமான மருந்துகள் உள்ளிட்ட அனைத்து தபால்களைகளையும் அவரவர் இடத்திற்கே/வீட்டிற்க்கே கொண்டு சேர்பிக்கும் தபால்காரர், முக்கியமான வரவு/செல்ல செய்வதற்கு ஏதுவாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அஞ்சலக சிறுசேமிப்பு திட்ட சேவைகளை தொடர்ந்து வழங்கி வரும் கிராமப்புற/நகர்புற அஞ்சல் அதிகாரிகள்/ அஞ்சல் எழுத்தர்கள் என நமது அஞ்சல் துறை ஊழியர்கள் அனைவரும் களத்தில் முன்னணி சேவகர்களாக பணிபுரிந்து வருகிறோம்.


இந்த சூழலில், எங்களது NFPE அஞ்சல் ஊழியர் தொழிற்சங்கத்தின் சார்பில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை மேற்படி நடவடிக்கைக்காக சமர்பிக்கின்றோம்.


1.ஈரோடு கோட்டத்தின் கீழ் உள்ள எந்தவொரு அஞ்சலகத்தில் பணிபுரிபவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படும் பட்சத்தில், உடனடியாக சம்பந்தப்பட்ட அஞ்சலகத்தை (தற்காலிகமாக) மூடுவதற்கு தங்கள் அலுவலகத்தின் மூலம் எங்கள் ஈரோடு அஞ்சல் கோட்ட அதிகாரி உயர்திரு SSPOs அவர்களுக்கு அறிவுறுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம். இதன்மூலம் சம்பந்தப்பட்ட அஞ்சலகத்தில் பணிபுரியும் சக ஊழியர்களுக்கோ , அல்லது அந்தபகுதி பொதுமக்களுக்கோ தோற்று பரவாமல் இருப்பதை உறுதி செய்யலாம்.


2.நமது ஈரோடு அஞ்சல் கோட்டம் முழுவதும் சுமார் 850 அஞ்சல் பணியாளர்கள், முன்கள சேவர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.அந்தந்த பகுதி சுகாதார மையங்களில், நமது அஞ்சல் ஊழியர்களுக்கு கொரோனா நோய் தடுப்பு ஊசி போடுவதில் முன்னுரிமை அளிக்க வேண்டுகிறோம். மேலும் அஞ்சல் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கோரோனோ சிறப்பு தடுப்பூசி முகாம் ஏற்படுத்தும் பட்சத்தில் , நமது அஞ்சல் துறை ஊழியர்கள் மேலும் உடல் உறுதியோடு மக்கள் சேவை செய்ய இயலும். 

3.இந்த கொரோனா பெருந்தொற்று காலத்திலும் மருத்துவம், காவல் ஆகிய துறைகளோடு நமது அஞ்சல் துறையும் பொதுமக்களுக்கு சேவை வழங்கி வருவதால் , ஊழியர்கள் பலருக்கும் இந்த கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அப்படி பாதிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதில் பல சிக்கல்கள் எழுகின்றன. ஆதலால் நமது மாவட்டத்தில் அஞ்சல் துறை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு/அவர்களது குடும்பத்தினருக்கு  கொரொனோ தொற்று ஏற்படும் பட்சத்தில், அவர்களுக்கென பிரித்யேகமாக/தற்காலிகமாக  ஒரு கொரோனா சிகிச்சை மையம் தொடக்கி சிகிச்சை அளிக்கும்பட்சத்தில் அந்தந்த அத்தியாவசிய துறைகள் தத்தம் பணிகளை இடைவிடாது தொடர வழிவகுக்கும் என்பதை தெரிவித்துக்கொண்டு அதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.  .


ஈரோடு மாவட்டத்தில் உள்ள அஞ்சல் துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் நலன்கருதி மேற்கூறிய அனைத்து கோரிக்கைகளையும் தாங்கள் தயவுகூர்ந்து பரிசீலனை செய்து, தக்க நடவடிக்கைகளை எடுக்கும்படி எங்கள் NFPE அஞ்சல் ஊழியர் தொழிற்சங்கத்தின் மூலம் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி.

தங்கள் உண்மையுள்ள



சி.செல்லமுத்து

கோட்டச் செயலாளர்

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்(NFPE)

ஈரோடு  கோட்டக் கிளை

ஈரோடு 638001.

தொடர்புக்கு : 70102 72295/ 98658 85113.

 

No comments:

Post a Comment