MENU BAR

Thursday 26 July 2012

அடிக்கடி டென்சனா..? எளிய தீர்வு..!

இப்போதெல்லாம் எதுக்கெடுத்தாலும் டென்சன்..டென்சன் தான் போங்க.. காலையில ஸ்கூலுக்குப் புறப்பட்ட பிள்ளைகளிலிருந்து, அவலகத்துக்கு புறப்பட பெற்றோர்கள் வரைக்கும் இந்த டென்சன் ஆட்டிப் படைக்குது... காரணம் என்ன? நம்முடைய செயல்களை நாம் முறைப்படுத்தாது தான்.. மற்றபடி டென்சனுக்கு மற்றவர்கள் என்றுமே காரணமாக இருக்கமாட்டார்கள்.

ways to reduce tension

டென்சன்(tension) என்றால் என்ன?

டென்சன் என்ற ஆங்கில வார்த்தைக்கு பல தமிழ்வார்த்தைகளைச் சொல்லலாம். மன இறுக்கம், கோபம், மனக் குழப்பம்...இப்படி. குறிப்பாக சொல்லவேண்டுமானால் மன இறுக்கம்தான். அந்த மனசு யாரிடம் இருக்கிறது.. நம்மிடம்தானே...? அப்போ டென்சனுக்கு யார் காரணம்.. நாம் தானே..? நம்மிடம் உள்ள மனசு இறுகி அதன்விளைவாக குழப்பச் சூழ்நிலை அடைகிறது.. அந்த மனத்தை யார் நிர்வகிப்பது.. நாம்தானே...!!!

அதனால் உங்களுடைய மன இறுக்கத்திற்கு மற்றவர்கள் எப்போதும் காரணமாக இருக்கமாட்டார்கள் என்கிற உண்மையை மட்டும் நன்றாக உணர்ந்துகொள்ளுங்கள். சரி. இந்த டென்சனை எப்படி குறைப்பது? ஒரு சில வழிமுறைகளைப் பார்ப்போமா..!

நீங்கள் வீட்டிலுள்ள பொருட்களை சரியான இடத்தில் வைக்கப் பழகிக்கொண்டாலே வாழ்க்கையில் பாதி டென்சன் குறைந்துவிடும். உதாரணமாக வீட்டுச் சாவி, கார் சாவி(Car Key), போன்றவைகளை சாவி மாட்டும் கொக்கியில் மாட்டிவிடப் பழகிக்கொள்ள வேண்டும். நம்மவர்கள் என்ன செய்கிறார்களென்றால் வீட்டைத் திறக்க வேண்டியது... கையில் உள்ள சாவியை பார்வை எங்கு செல்கிறதோ அந்த இடத்தில் வைத்துவிட வேண்டியது.. மறுபடியும் அந்த சாவி எடுக்கும்போது எங்கே வைத்தோம் என யோசிப்பார்கள்.. அமைதியான மனநிலையில் இருந்தால் ஓரளவுக்கு நினைத்துப் பார்த்து சாவியை மீட்டுவிடுவார்கள்.. இல்லையென்றால் வீட்டில் ஒரு பெரிய களேபரமே நடக்கும். நான் இங்கதான் வைத்தேன்... ஆனால் சாவியை காணல.. என்று பிள்ளைகளை கேட்டு நச்சரிப்பார்கள்.. இவன்தான் எங்கேயாவது எடுத்துப் போட்டிருப்பான் என்று அவர்களின் தவறை பிள்ளைகள் மீது காட்டும் பெற்றோர்களும் உண்டு. இதுபோல முக்கியமாக நாம் சரியான இடத்தில் வைக்கவேண்டிய பொருட்கள், ரேஷன் கார்ட்(family card), பால் கார்ட்(milk card), கிரடிட் கார்ட்(Credit Card), பேன் கார்டு(PAN CARD), டிரைவர் லைசென்ஸ்(Driver License), கார் சாவி, வீட்டு சாவி, இப்படி தினமும் பயன்படுத்தும் பொருட்களை அதனதன் இடத்தில் வைக்க வேண்டியது ரொம்ப முக்கியம்.

இந்தப் பிரச்னைகள் வராமல் இருக்க மறக்காமல் சாவிகொத்தை(Bunch of keys) சாவிமாட்டும் கொக்கியில் மாட்டியிருந்தால் சாவி எங்கும் போயிருக்காது அல்லவா?

இதுபோலதான் ஒவ்வொரு பொருளுக்கும் இந்த விதி முறை பொருந்தும். கிச்சனில் இருக்க வேண்டிய கரண்டி ஹாலில் வந்து விழுந்து கிடக்கும்.. கிச்சனில் தேடினால் கரண்டி எங்கிருந்து வரும்..? அதுபோலவே மளிகைப்பொருள் டப்பாக்களும் அப்படிதான்.. அவசரத்தில் மாற்றி மாற்றி வைத்துவிட்டு, பிறகு வாணலியை அடுப்பில் வைத்துவிட்டு எண்ணையை ஊற்றிவிட்டுதான் கடுகு டப்பாவைக் காணோமே..? என்று தேடுவார்கள்... பெண்களுக்கு இதுபோல பிரச்னைகள் அனுதினமும் நடக்கும் விஷயங்கள்(daily activities).. இதற்கெல்லாம் நாமேதான் காரணம். வைப்பதை ஒழுங்காக இருக்கும் இடத்தில் வைத்துவிட்டால் பிறகேது நமக்கு டென்சன்..

அனாவசிய செலவுகளைத் தவிர்க்க வேண்டும்:

ஒரு கடைத்தெருவுக்கு போகிறோம்.. தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் போவோம்.. ஆனால் அங்கே கடைவீதியில் குறைந்த விலையில் அதிக மதிப்புள்ள பொருட்களை(High value products at low prices) விற்பதாக கடைவிரித்துப் போட்டிருப்பார்கள். அதில் கண்ணைக் கவர்ந்த பொருளை உடனே யோசிக்காமல் எடுத்துவிடுவது.. பிறகு பார்த்துக்கொள்ளலாம்.. வீட்டிற்குத் தேவையான பொருட்களை இந்த மாதம் குறைத்து வாங்கிக்கொள்ளலாம்.. அல்லது வேறு எங்காவது கடன் வாங்கி ஓட்டிவிடலாம் என்று நினைவு மேலோங்கி, நாம் வாங்கச் சென்ற பொருளை வாங்காமல் வேறு பொருளை வாங்கிவிடுவது. பிறகு பாருங்களேன்.. மாத்த்தின் பதினைந்து தேதி தொடங்கியதிலிருந்தே திண்டாட்டம் ஆரம்பித்துவிட்டும். ஒவ்வொரு செலவையும் குறைக்க முடியாமல் திண்டாடுவார்கள். அன்றாட அத்தியாவசிய தேவைகளில் எதையும் குறைக்க முடியாது அல்லவா? இதன் விளைவாக வீட்டில் ஒரு போர்க்களமே வெடித்துவிடும் அபாயமும் இருக்கிறது.

திட்டமிடுதல் அவசியம்:

ஒரு சிலர் இருப்பார்கள். தங்களுக்கு எந்த பிரச்னையுமே வாரது என்று அசட்டு துணிச்சலுடன் இருந்துவிடுவார்கள். இது தான் வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்னையைக் கொண்டுவந்துவிடும். சாதாரணமாகவே இது தோன்றினாலும் எதிர்காலப் பிரச்னையை எதிர்கொள்ள முடியாமல் செய்துவிடும். இந்த அசட்டுத் துணிச்சல்... உதாரணமாக பாருங்கள்.. ஒரு வேலைக்கோ, அல்லது தேர்வுக்கோ விண்ணப்பம் அனுப்ப வேண்டும். ஆனால் இவர்கள் கடைசித் தேதிவரை நாளை செய்துவிடலாமே.. நாளை செய்துவிடலாமே.. இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. இன்னும் 4 நாட்கள் இருக்கிறது இப்படி.. தனக்குத்தானே சமாதானம் செய்து இறுதிநாள் வரும் வரை இருந்துவிடுவார்கள். பிறகு இறுதிநாளில் விண்ணப் அனுப்பச் சென்றால்.. அங்கே இவர்களைப் போலவே பல ஆயிரம் பேர் நின்று கொண்டிருப்பார்கள்.. இறுதியாக தேர்வுக்கான விண்ணப்பம் அனுப்பவேண்டிய காலம் முடிந்திருக்கும்.. அதற்குப் பிறகுதான் இவர்களுக்கு டென்சன் வரும்..

சரி அடுத்த தேர்வுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்று இவர்களுக்கு இவர்களே சமாதானம் செய்துகொள்வார்கள்... ஆனால் கடந்த முறை தேர்வு எழுதிய நண்பர்களோ, தெரிந்தவர்கள் தேர்வில் வெற்றிப்பெற்று பணியிலும் அமர்ந்துவிட்டால்.... அப்போது தோன்றுமே ஒரு டென்சன்.. ஆஹா... அது சொல்லில் வடிக்க முடியாது.. அடடா... "ஜஸ்ட் மிஸ் பண்ணிட்டோமே.." என்று உள்ளுக்குள் புழுங்குவார்கள்...

இந்த வகையில் இன்னும் சிலவற்றைக் கூறலாம்.. தேர்வுக்கு முன்னதாகவே புறப்பட்டு செல்வது.. அலுவலகத்திற்கு ஒரு அரைமணி நேரம் முன்னதாக செல்வது.. இப்படி வேலைக்குத் தகுந்த மாதிரியான சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுவது பலனைத் தரும்..

அதனால்தான் சரியான திட்டமிடுதல் அவசியம்..நேர நிர்வாகம் மிக முக்கியம். இதனால் நமக்கு டென்சனும் குறையும்.. மனதில் அந்த வேலையை செய்துவிட்டோம் என்ற திருப்தியும் இருக்கும்.

இது தற்போது மிக முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிது.. சமையல் செய்யும் எரிவாயு கலன்(Cooking gas cylinder) தீர்வதற்கு முன்பே கவனமாக இருப்பது. அல்லது அதற்கு பதிலாக மண்ணெண்ணெய் அடுப்பு சரியாக இருக்கிறது அதற்கான மண்ணெண்ணெய் போதுமான அளவு இருக்கிறதா என்று சோதனை செய்துகொள்வது. திடீரென வீட்டிற்கு விருந்தினர்கள் வந்துவிட்டார்கள். அவர்களுக்கு இரண்டு மூன்று நாட்கள் விருந்துபடைத்திருப்போம். இதனால் திட்டமிட்டபடி குறிப்பிட்ட நாடகளுக்கு வரும் என்று எண்ணியிந்த கேஸ் ஒரு வாரம் முன்னதாகவே தீர்ந்துவிடும்.. இதனால் இந்த விஷயத்தை முக்கியமாக கவனிக்க வேண்டும். சாப்பாட்டு விஷயமல்லவா.. கவனம்.. கவனமாக இருக்கவேண்டும். (சகோதரிகள் இதை கவனிக்க...)

கோடைக்கால வெப்பம், மின்சாரப் பற்றாக்குறை... தீடிர் காற்று,... மழை.. இவற்றால் மின்சாரம் அதிகம் தடைபடும்.. (இப்போது தமிழக மக்கள் இதற்கு பழகிக்கொண்டுவிட்டார்கள் என நினைக்கிறேன்.) முன்னெச்சரிக்கையாக மெழுகு வர்த்தி, அல்லது டார்ச் லைட் போன்றவற்றை எடுத்துவைத்துக்கொள்வது நல்லது. இன்னும் சரியாக சாப்பிட உட்காரும்போதுதான் 'பட்' டென மின்சாரம் தடைபடும்.. பிறகு இருட்டில் தேடுவதென்பது கடினம்.. (இப்போ செல்போன் டார்ச் கையிலேயே இருக்கு பாஸ்...என்கிறீர்களா?..)

வெளியில் வாகனங்களை எடுத்துக்கொண்டு புறப்படுகிறோம் என்றால் உடனே வாகனத்தை நன்றாக சோதனை செய்துகொள்ள வேண்டும். இப்போது ஹெல்மெட்(Helmet) அணியாமல் சென்றால் அபராதம்.. விதிக்கிறார்கள் என்பதால் மறக்காமல் ஹெல்மெட் அணிந்து செல்வது நல்லது.. இது நம் உயிருக்கும் பாதுகாப்புதானே.. அதனால் அபாரத்திற்கு பயப்படாமல் உயிர்காக்க உதவும் என்ற எண்ணத்தில் எடுத்துச் செல்லலாம். வாகனத்தில் காற்று, தேவையான பெட்ரோல்(Petrol) இருக்கிறதா? என பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஆள்அரவமில்லாத இடத்தில் வண்டியை நிறுத்திவைத்துக்கொண்டு "ஙே' என முழிக்க வேண்டியதுதான். இதனால் ஏற்படும் டென்ஷன் இருக்கிறதே.. அனுபவபட்ட எனக்கு நன்றாக தெரியும்...

பள்ளி மாணவர்களாக இருந்தால் அன்றைய பாடங்களை, அன்றே முடித்துவிடுவது நல்லது.. இல்லையென்றால் காலையில் பள்ளிக்கு கிளம்பும்போது டென்சன்... அதைவிட மாணவர்களுக்கு மற்ற குறுக்கு வழிகளை மனம் வழிதேடும். ஆசிரியரை ஏமாற்ற நினைப்பது.. பெற்றோர்களை ஏமாற்ற நினைப்பது.. இப்படி. தொடர்ந்து இவ்வாறு அவர்கள் நினைக்கும்போது படிப்பின் தரம் குறைந்து அ்வர்கள் எதிர்காலத்தில் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.. எனவே அன்றாட கடன்களை கழிப்பதுபோல.. அன்றாட பாடங்களையும் அன்றன்றே முடிப்பது நல்லது. இதைப் பெற்றோர்கள் தவறாமல் கவனிப்பது அவசியம். உங்களுக்கு டென்சனும் குறையும்... ஆசிரியர்கள், பெற்றோர்களிடத்திலும் மாணவர்கள் நல்ல பெயர் எடுப்பார்கள்....

டெலிபோன் பில்(Telephone bill), கரண்ட்பில்(Current Bill) மற்ற மாதாந்திர தொகைகளை குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே கட்டப் பழகிக்கொள்ளுங்கள்.. இதனால் உங்களுக்கு டென்சன் இல்லாமல் இருக்கும். அதே சமயம் உங்கள் பணமும் விரயமாகமல் இருக்கும். தேவையில்லாமல் காலகடப்புக் கட்டணம் செலுத்துவதையும் தடுக்கலாம். இப்போது ஆன்லைனிலேயே இந்த வசதிகள் வந்துவிட்டது.. இதை உடனுக்குடனேயே செய்துவிடலாம். போஸ்ட் ஆபிசிலும் இப்போது மின்சாரக் கட்டணம், டெலிபோன் பில் கட்டும் வசதி வந்துவிட்டது. அதனால் யோசிக்காமல் உடனேயே இவற்றை குறிப்பிட்ட தேதிக்குள் எளிதாக கட்டிவிட முடியும்.

விரலுக்கு ஏற்ற வீக்கம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.. இது வேடிக்கையாக சொல்வதற்காக இல்லை.. நம்முடைய பொருளாதார வசதிக்கு தகுந்த மாதிரி நம்முடைய தேவைகளையும் வைத்துக்கொள்ள வேண்டும். ஏதோ ஒரு சினிமா படத்தில் தகுதிக்கு மீறிய செலவுகளை செய்து, பிறகு குடும்பம் வறுமையில் கஷ்டப்படும்.. அந்த நிலைமை உருவாக்க விடாதீர்கள்.. பக்கத்து வீட்டில் புது கார் நிற்கிறது.. நாமும் அதை வாங்க வேண்டும் என்று நினைப்பது தவறல்ல.. அதற்கான வருமானம் இல்லாமல், கடன் வாங்கி வாங்குவதுதான் தவறு.. பிறகு அதை கட்ட முடியாமல் திண்டாடும் போது ஏற்படும் கஷ்டங்கள், மேலும் உங்களை டென்சனுக்கு உள்ளாக்கும். அதனால் உங்களுடைய பொருளாதார வசதிக்கு தகுந்த மாதிரி உங்களுடைய தேவைகளையும் வைத்துக்கொள்ளுங்கள்.

மேலே கூறியதை சுருக்கமாக சொல்வதென்றால்... திட்டமிடாமை.., அதிக எதிர்பார்ப்பு.. செயல் ஒழுங்குமுறை இல்லாமை...இவைதான் முக்கியமாக நம்முடைய டென்சனுக்கு காரணம். இதன் கூடவே வேறொன்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.. அதுதான் நான் அடிக்கடி சொல்லும் வார்த்தை தன்னம்பிக்கை..

தன்னம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றிதான்...

டென்சன் என்பதே உங்களை எட்டிப்பார்க்காது.. காரணம் தன்னம்பிக்கை உள்ளவன், திட்டமிட்டு, சரியாக செயல்படுத்தும் திறனைக் கற்று வைத்திருப்பான்.. ஏதேனும் குழப்ப சூழ்நிலைகளில் அமைதியாக சிந்தித்து சரியான நேரத்தில் முடிவெடுப்பான்.. சின்ன சின்ன விஷயங்களுக்கும் டென்சன் ஆகவே மாட்டான்.....அதற்கு என்ன காரணம் என்று சிந்திக்கும்போது... கடைசியில் அந்தக் காரணத்திற்குரிய நபர் நாமேதான் என்று நம்மை நோக்கியே அந்த அம்பு பாய்ந்துவரும்.. எனவே எந்த பிரச்னைக்கும், டென்சனுக்கும் நாம்தான் காரணம்.. செயல்களை சரியாக திட்டமிட்டு முறைப்படுத்துங்கள்.. நிதானமாக யோசித்து நல்லதை யார் சொன்னாலும் , வயது வித்தியாசமில்லாமல் கேட்டு, அது சரியென்றால் ஏற்றுக்கொள்ளுங்கள்.. பிறகு வாழ்க்கையில் டென்சன் ஏது.. ?

அன்பு நண்பர்களே.. இனி நீங்கள் டென்சனில்லாமல் மகிழ்ச்சியாக இருங்கள்...!!!!

No comments:

Post a Comment